23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!
இந்தியாவின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது என்றும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தேவையான எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா தயாராக இருப்பதாகவும் தோவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா அளித்த பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் பின்னணி குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியுள்ளார். இந்த ராணுவ நடவடிக்கைக்கான திட்டமிடல், உளவுத்தகவல்கள் மற்றும் இந்தியாவின் பதிலடி வியூகம் குறித்து அவர் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதாக அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு திரும்பியதும் விமான நிலையத்திலேயே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அப்போது பிரதமர் மோடி முதலில், “இந்த தாக்குதலை நடத்தியது யார்? இதற்கு பொறுப்பானவர்கள் யார்?” என்று கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். குறுகிய காலத்திற்குள் இந்திய உளவு அமைப்புகள் தேவையான தகவல்களை சேகரித்து, தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண உதவியதாகவும் தோவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரி என நடித்து மோசடி? வீட்டில் சிக்கிய ‘ரகசிய ஏஜென்ட்’! போலீஸ் சோதனையில் பகீர்!
பயங்கரவாதிகளை அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் தேடிச் சென்று தண்டிக்க வேண்டும் என்பதே பிரதமரின் தெளிவான உத்தரவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது என்றும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தேவையான எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா தயாராக இருப்பதாகவும் தோவல் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2025-ம் ஆண்டு மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஆரம்பகட்ட தாக்குதல் நடவடிக்கை சுமார் 23 நிமிடங்களில் நிறைவடைந்ததாகவும், இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தோவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தியப் படைகளும் எதிர்தாக்குதல்களை நடத்தின.
இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த தீவிர ராணுவ மோதல் மொத்தம் 88 மணி நேரம் நீடித்ததாகவும், மே 10-ம் தேதி மாலை பரஸ்பர புரிதலின் அடிப்படையில் மோதல் முடிவுக்கு வந்ததாகவும் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப திறனுக்கு முக்கிய சான்றாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!