×
 

"47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையைச் சேர்ந்த 47 அதிகாரிகள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அளவிலான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரத்தில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வந்த தேசிய தேர்வு முகமையைச் (NTA) சேர்ந்த 47 அதிகாரிகளை ஒரே அடியில் பணிநீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்வு முறையின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கடும் அமளி காரணமாகவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. தேசிய தேர்வு முகமையில் ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள அரசு, முறைகேட்டில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் சிலர் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, கடுமையான குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவும் ஆயத்தமாகி வருகிறது.

 

வினாத்தாள் முன் கூட்டியே கசிந்து பல லட்ச ரூபாய்க்குப் கைமாறியதாக வெளியான அதிர்ச்சித் தகவல்கள், நாட்டின் கல்வி அமைப்பின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியது. இதன் எதிரொலியாகவே உயர்கல்வித் துறைச் செயலாளர் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த 47 பேரை ஒரே அடியில் தூக்கும் இந்த இரும்புக்கரம் வாய்ந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இதையும் படிங்க: கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

வினாத்தாள் அச்சிடுதல், விநியோகம் செய்தல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் நேர்ந்த கடுமையான குளறுபடிகளே இந்த கசிவுக்கு முதன்மையான காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  

நாட்டின் தலைநகரான டெல்லி ஜந்தர் மந்தர் முதல் மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் காட்டுத்தீ போல் பரவிய மாணவர் போராட்டத்தின் அழுத்தத்திற்குப் பணிந்தே இந்த உச்சகட்டக் களையெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், தேசிய தேர்வு முகமையின் அமைப்பையே முழுமையாக மாற்றி அமைக்கும் பணிகளும் தற்போது தீவிரமடைந்துள்ளன. குற்றம் புரிந்தவர்கள் எவ்வளவு பெரிய அதிகார பதவியில் இருந்தாலும் தப்ப முடியாது என்றும், விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணையை முடுக்கிவிட்டு குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.  
 

இதையும் படிங்க: டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share