கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்! 1,000 இந்தியர்களுக்குச் சீனா அனுமதி!
இந்தியப் பயணிகளுக்கான கைலாய மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாகச் சீனத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கைலாய மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியப் பயணிகளுக்குச் சீனா அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவு மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளதை இந்தப் புதிய நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் அமைந்துள்ள கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரியைத் தரிசிக்க இந்திய யாத்ரீகர்களுக்குச் சீன அரசு இப்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. முதற்கட்டமாகச் சுமார் 1,000 இந்தியர்கள் சீனா வழியாகத் திபெத்திற்குப் பயணம் மேற்கொள்ளச் சீன அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதற்கான விசா நடைமுறைகள் மற்றும் பயணப் பாதைகளைச் சீரமைக்கும் பணிகளில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நிலவிய பதற்றமான சூழல் காரணமாக, கைலாய மானசரோவர் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து, இந்த யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதால், பல ஆண்டுகளாகக் காத்திருந்த இந்தியப் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அனுமதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வரும் காலங்களில் இந்தப் பயணத்திற்கான கூடுதல் சலுகைகள் மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் குறித்துச் சீனா மேலும் அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "இந்தியா ஏற்கனவே இந்து ராஷ்டிரம் தான்" - நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிரடி!