×
 

ரொம்ப மகிழ்ச்சி.. நம் உறவு இன்னும் வலுப்பெறட்டும்.. குரோஷியா பிரதமருக்கு மோடி நன்றி..!

குரோஷியா நாட்டில் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்திற்கு அந்நாட்டு பிரதமருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடானா சைப்ரஸ், கனடா மற்றும் குரேஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். முதலில் சைப்ரசில் நடந்த வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு, சைப்ரஸ் குடியரசின் மிக உயர்ந்த கௌரவமான "கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III" (Grand Cross of the Order of Makarios III) விருது சைப்ரஸ் குடியரசுத் தலைவர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிட்சால் வழங்கப்பட்டது. இந்த விருது, சைப்ரஸின் முதல் குடியரசுத் தலைவரான பேராயர் மகாரியோஸ் III நினைவாக பெயரிடப்பட்டது மற்றும் பொதுவாக வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

இந்தியா-சைப்ரஸ் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்தது. பிரதமர் மோடி இந்த விருதைப் பெற்ற பிறகு, அதை இந்தியா-சைப்ரஸ் நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். 

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்று, அங்கு கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா புறப்பட்டார். அங்கு அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் குரோஷியா பிரதமர் பென்கொவிக், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது, வரலாற்றில் முதல்முறையாக அச்சிடப்பட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை பிரதமர் மோடிக்கு பென்கொவிக் பரிசளித்தார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "விஞ்ஞானியும், மிஷனரியுமான பிலிப் வெஸ்டின்(1748–1806) லத்தீன் மொழியில் 1790-ம் ஆண்டு எழுதி எழுதி முதல் முறையாக அச்சிட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கினேன்.

பிலிப் வெஸ்டின் இந்தியாவில் வாழ்ந்தபோது, கேரள பிராமணர்கள் மற்றும் உள்ளூர் கையெழுத்துப் பிரதிகள் மூலம் அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இது குரோஷியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஆரம்பகால கலாசார உறவுகளின் அடையாளமாக விளங்குகிறது.

மேலும் டாக்டர் சினிஷா கிரிக் எழுதிய "குரோஷியா & இந்தியா, பைலேட்டிரல் நேவிகேட்டர் பார் டிப்ளமேட்ஸ் அண்ட் பிசினஸ்" என்ற புத்தகத்தையும் வழங்கினேன். இந்த புத்தகம் நமது இரு நாடுகளின் சாதனைகளையும், நாம் இன்னும் உணரக்கூடிய ஆற்றலையும் பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டார். 

இந்நிலையில், பிரதமர் மோடி இது குறித்து 'எக்ஸ்' தளத்தில், "பிரதமர் பென்கொவிக்கிற்கு நன்றி. இது உண்மையிலேயே இந்தியாவிற்கும், குரோஷியாவிற்கும் இடையிலான நீடித்த அறிவுசார் மற்றும் கலாச்சார உறவின் சின்னமாகும். இனி வரும் காலங்களில் இந்த உறவு இன்னும் வலுப்பெறட்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ட்ரம்ப் அழைத்தும் அமெரிக்க செல்ல மறுத்த மோடி.. தனி அறையில் சந்தித்த பாக். ராணுவ தளபதி.. வெடிக்கும் புது பூகம்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share