×
 

டெல்லி தீ விபத்து எதிரொலி! ஆக்‌ஷனில் இறங்கிய அரசு! 94 கட்டிடங்கள் இடிப்பு! 114 கட்டிடங்கள் சீல்!

ஜூன் 1 முதல் இதுவரை 94 சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதுடன், 114 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி இணைந்து மேற்கொண்ட சோதனைகளில், ஜூன் 1 முதல் இதுவரை 94 சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும், விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 114 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், கட்டிட பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடல் விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட 124 சொத்துகளுக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கூறுகையில், சட்டவிரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக அரசு “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையை பின்பற்றி வருவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, நிரந்தர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

மேலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தீ விபத்து அல்லது கட்டிட விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், டெல்லி மேம்பாட்டு ஆணையமும் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

சமீப காலங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் மற்றும் கட்டிட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கடவுளின் தேசத்தில் கருணை காட்டாத வானிலை! கனமழை, மரம்முறிவு, சுவர் இடிந்து 7 பேர் மரணம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share