இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை.. பிரதமர் மோடி காட்டிய அதிரடியால் கப்சிப் ஆன ட்ரம்ப்..!
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் சமரச முயற்சியை நாங்கள் என்றுமே அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிக்க மாட்டோம் எனவும் டிரம்பிடம் மோடி திட்டவட்டமாக கூறினார்.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!
இந்த நிலையில், ட்ரம்ப் மத்தியஸ்சம் குறித்தும், போர் நிறுத்தம் குறித்து இந்தியா - பாக்., அறிவிக்கும் முன்னரே ட்ரம்ப் அறிவித்தது குறித்தும் சர்ச்சையானது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பிரதமர் மோடி சைப்ரஸ் பயணத்தை முடித்துக் கொண்டு கனடா சென்றார். கனனாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், இஸ்ரேல்– ஈரான் போர் தீவிரமானதால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்காக, அதிபர் டிரம்ப் மாநாட்டின் பாதியிலேயே வெளியேறி, வாஷிங்டனுக்கு புறபட்டு சென்றதால், மோடியுடனான சந்திப்பு நடக்க வழியில்லாமல் போனது.
கனனாஸ்கிஸ் நகரில் இருந்தபடி, அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேசினார். இந்த உரையாடல் 35 நிமிடங்களுக்கு நீடித்தது. ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குததைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம்தான் தாக்குதலை நடத்தியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தோம். பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என மோடி கூறினார்.
இதன்மூலம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்ற மெசேஜ் உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது என்றார். இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை ராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போரை நிறுத்த இந்தியா முடிவு செய்தது எனவும் டிரம்பிடம் மோடி கூறினார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் சமரச முயற்சியை நாங்கள் என்றுமே அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிக்க மாட்டோம் எனவும் டிரம்பிடம் மோடி திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில், டிரம்ப் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி இங்கு வருவதாக இருந்தது. அவருடன் பேசினேன்; ஆசிப் முனிருடனும் பேசினேன். இரண்டு மிகச்சிறந்த தலைவர்கள் மற்றும் அவர்களுடைய சிறந்த அதிகாரிகள், நல்ல ஒரு முடிவை எடுத்தனர்.இல்லாவிட்டால், அணு ஆயுதப்போர் நடந்திருக்கும். அதை தவிர்க்கும் வகையில், மோதலை நிறுத்த இரு தலைவர்களும் முடிவு எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.இருநாட்டுத் தலைவர்களே போரை நிறுத்த முடிவு செய்துள்ளதை, டிரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் அழைத்தும் அமெரிக்க செல்ல மறுத்த மோடி.. தனி அறையில் சந்தித்த பாக். ராணுவ தளபதி.. வெடிக்கும் புது பூகம்பம்..!