×
 

இந்தியா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாக்.,? உளறிக்கொட்டிய கடற்படை கேப்டனால் சிக்கலில் பாஜக..!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்கவும் பிரதமர் மோடி மறுக்கிறார். இந்த விவகாரத்தில் மோடி அரசு நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் இந்தியா போர் விமானத்தை இழந்ததை இந்திய முப்படைகளின் தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் ஒப்புக் கொண்டார். சிங்கப்பூரில் டிவிக்கு பேட்டியளித்த அனில் சவுகானிடம் இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? என கேட்கப்பட்டது. அதை அனில் சவுகான் திட்டவட்டமாக மறுத்தார்.

பாகிஸ்தான் சொல்வதில் உண்மை இல்லை. நாம் எத்தனை போர் விமானங்களை இழந்தோம் என்பது முக்கியம் இல்லை. அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற காரணத்தை கண்டறிவது தான் முக்கியம்.

நம் தவறுகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்து மறுபடியும் பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதல் நடத்தினோம். முன்பை விட நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தோம் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்து கட்டியிருப்போம்.. ஆனா! ஆபரேசன் சிந்தூரில் நடந்த அரசியல்.. உண்மையை உடைத்த கேப்டன்..!

இந்திய விமானப்படை போர் விமானத்தை இழந்ததை அனில் சவுகான் ஒப்புக் கொண்டாலும் கூட எத்தனை போர் விமானம் என குறிப்பிட்டு சொல்ல மறுத்து விட்டார். இந்த நிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தாவில் நடந்த கருத்தரங்கில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சில விமானங்களை இந்தியா இழந்தது என சொன்னார். விமானங்களை இந்திய விமானப்படை பறிகொடுத்தது ஏன்? என்பதற்கான காரணத்தையும் கேப்டன் சிவகுமார் சொன்னார்.  

பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மற்றும்அவர்களது வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை தாக்க வேண்டாம் என, நமது ஆட்சியாளர்கள் கூறினர். அதனால்தான் நாம் விமானங்களை இழக்க நேர்ந்தது என சிவகுமார் கூறினார். 

ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதன் பிறகு நாங்கள் எங்கள் போர் வியூகத்தை மாற்றிக்கொண்டு தாக்குதல் நடத்தினோம். முதலில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கினோம். பிறகு, ராணுவ  தளங்களை  தாக்கினோம். பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி அனைத்து தாக்குதல்களையும் நடத்தினோம் என கேப்டன்  சிவகுமார் கூறினார். 

கேப்டன் சிவகுமார் கூறிய  கருத்துக்களை காங்கிரஸ் கட்சி கெட்டியாக பிடித்துக் கொண்டு மத்திய அரசை சாடத் துவங்கியது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்தியா விமானத்தை இழந்தது என முதலில் முப்படை தலைமை தளபதி சிங்கப்பூரில் சொன்னார். இப்போது, இந்தோனேஷியாவில் இன்னொரு மூத்த ராணுவ அதிகாரி சொல்லியிருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி மத்திய அரசு ஆரம்பம் முதலே தவறான கருத்தை சொல்லி வந்தது இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது என ஜெய்ராம் ரமேஷ் கூறினார். 

பாகிஸ்தானுடனான போர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி கருத்துக்களை கேட்காதது ஏன்? என்பதும், அதுபற்றி விவாதம் நடத்த பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்பதும் இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது எனவும் காங்கிரஸ் தலைவர்கள் சாடினர். கேப்டன் சிவகுமாரின் கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து இந்தோனேஷியாவுக்கான இந்திய தூதகரம் ஒரு அவசர விளக்கத்தை வெளியிட்டது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கீழ்தான் இந்திய படைகள் செயல்படுகின்றன. நமது அண்டை நாடுகளில் நிலைமை அப்படி இல்லை என்ற கருத்து கேப்டன் சிவகுமாரின் பேச்சு மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் சொல்ல வந்த முழு கருத்தை மீடியா செய்திகள் எதிரொலிக்கவில்லை. அவர் சொன்னதை திரித்து செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அழிப்பதுதான். 

இருநாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலை மேலும் மோசமாக்குவது இந்திய ராணுவத்தின் எண்ணமில்லை என்ற கருத்தையே கேப்டன் சிவகுமார் பேச்சு எதிரொலித்தது என, இந்திய தூதரகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இறங்கி அடித்ததா இந்தியா? ஒப்பாரி வைக்கும் பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சகம் ரிப்ளை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share