இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!
குஜராத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் அரை மணிநேரம் மின் விளக்கு மற்றும் ஏசி இல்லாமல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் அரை மணி நேரம் மின் விளக்குகளும் ஏசியும் செயலிழந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விமானத்திற்குள் வியர்த்து தவித்ததாக கூறப்படுகிறது.
வதோதராவில் இருந்து டெல்லி நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் சுமார் 160 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில், புறப்படும் முன்பாக திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தின் மின் விளக்குகள் அணைந்தன. அதோடு, ஏசியும் செயலிழந்ததால் விமானத்திற்குள் கடும் வெப்பம் நிலவியது.
திடீரென ஏற்பட்ட இந்த கோளாறால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வெளியில் வெப்பமான காலநிலை நிலவியதால், விமானத்தின் உள்ளே மூச்சுத்திணறல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக சிறு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் இருளிலும் வெப்பத்திலும் அமர்ந்திருந்தனர். தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரிசெய்ய முயன்ற நிலையில், பின்னர் மின்சாரம் மற்றும் ஏசி மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரிவான விளக்கம் வெளியிடவில்லை என்றாலும், பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக இந்தியாவில் பல விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள், அவசர தரையிறக்கங்கள் மற்றும் தாமதங்கள் அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோடை வெப்பத்தில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் நீண்ட நேரம் காத்திருப்பது பாதுகாப்பு மற்றும் பயணிகள் வசதி தொடர்பாக மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!