ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உதம்பூர் மாவட்ட வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய ராணுவம், காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவை இணைந்து பெரிய அளவிலான தேடுதல் வேட்டையை தொடங்கின. ட்ரோன் மூலம் நடத்திய கண்காணிப்பில் பயங்கரவாதிகளின் இடம் கண்டறியப்பட்டது.
பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை நெருங்கியபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கை சொந்தம் கொண்டாடும் சீனா, பாக்., அரசுகள்!! இந்தியாவுக்கு எதிராக பின்னப்படும் சதிவலை!
கொல்லப்பட்டவர்களில் ஒருவன் அவு மாவியா (Abu Maavia). இவன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய கோஷ்டி தலைவனாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவன். பல்வேறு தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டவன் என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு பயங்கரவாதி ஜப்பார் (Jappar) என்று அடையாளம் காணப்பட்டுள்ளான்.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு AK-47 துப்பாக்கிகள், பல கையெறி குண்டுகள், வெடிமருந்துகள், தொலைபேசி, ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், காவல்துறை, CRPF ஆகிய படைகள் இணைந்து பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ட்ரோன் கண்காணிப்பும் தொடர்கிறது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சமீப காலமாக எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்புப் படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. இந்த என்கவுண்டர் பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாடுகளை மேலும் கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பயங்கரவாதமே இல்லாத காஷ்மீர் தான் இலக்கு!! அதிகாரிகளுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!