×
 

சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல் 'சேச்சி'கள்..!!

கேரளம் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக நடிகைகள் களமிறங்கியுள்ளனர்.

கேரள சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை அடுத்து, வேட்பாளர்கள் அறிவிப்புகள் தீவிரமடைந்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) சமீபத்தில் இணைந்துள்ளது டுவென்டி-20 கட்சி.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட இக்கட்சி, 8 தொகுதிகளில் களமிறங்கியது. ஆனால் இம்முறை என்டிஏ கூட்டணியில் இணைந்து பலமான போட்டியை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது. இதற்காக கட்சிக்கு சுமார் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டுவென்டி-20 கட்சியின் தலைவர் சாபு எம். ஜேக்கப் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் பேசியபோது, கட்சியின் புதிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் அங்கமாலி, திருப்புனித்துரா, பெரும்பாவூர், ஏட்டுமானூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பலர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

பெரும்பாவூர் தொகுதியில் மலையாள சினிமாவின் பிரபல நடிகை லட்சுமி பிரியா போட்டியிடுகிறார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், பல வெற்றிப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார். திருப்புனித்துரா தொகுதியில் மற்றொரு நடிகையான அஞ்சலி நாயர் களமிறங்குகிறார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த அனுபவம் கொண்ட இவர், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர்.

ஏட்டுமானூர் தொகுதியில் நடிகையும் நடனக் கலைஞருமான வீணா நாயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்த இவர், கலைத்துறையில் ஆற்றல்மிக்கவராக அறியப்படுகிறார். அங்கமாலி தொகுதியில் பிரோமி குரியாகோஸ் (Promy Kuriakose) போட்டியிடுகிறார். வணிக மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றி வரும் இவர், சமூக ஊடகங்களிலும் ஆளுமை கொண்டவர்; குடும்ப வணிகங்களை நிர்வகிக்கும் அனுபவமும் உள்ளவர்.

இதுதவிர, டுவென்டி-20 கட்சி ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர்களில் திரைப்பட இயக்குநர் அகில் மாரர் (திருக்காக்கரா), சன்னி தாமஸ் (திருவம்பாடி), பாபு திவாகரன் (குன்னத்துநாடு), ரவி குளங்கரா (திருக்கரிப்பூர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுவரை கட்சி 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணியில் டுவென்டி-20-யின் இணைப்பு கேரள அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள், சமூக ஊடக ஆளுமைகள், தொழில்முறை வல்லுநர்கள் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவதன் மூலம், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகளிடையே போட்டி தீவிரமடைந்து வருகிறது.

இதையும் படிங்க: இனி 'கேரளா' இல்லை.. கேரளம்! மாநில பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share