வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!
கிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது. இதனால், அந்நாடு போரை நிறுத்தி விட்டு பேச விரும்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்தது.
புனே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, எதிர்காலப் போர் என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் உரையாற்றினார். அப்போது, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள் குறித்து பேசினார்.
பஹல்காம் சம்பவம் மிகவும் கொடூரமானது. குடும்பத்தினர், குழந்தைகள் முன்னிலையில் தலையில் சுட்டுக் கொன்றனர். மதத்தை கேட்டு கொலை செய்துள்ளனர். இது நவீன உலகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூகத்தில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் பயங்கரவாத சம்பவம் அல்ல இது. மேற்கத்திய நாடுகளில் ஓரிரு பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்தியாதான் அதிகபட்ச பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!
கிட்டத்திட்ட 20,000 பேர் பயங்கரவாத தாக்குதல்களால் பலியாகியுள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு வகையான திறன்களை கொண்டு தாக்குதலுக்கு முயற்சித்தன.
எனவே இதில் ஆபத்தின் அளவும் அதிகமாக இருந்தது. நமது முழுமையான திறனை போர்க்களத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்களிடம் மிகச் சிறந்த ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன.
போர் என்பது அரசியல் வரலாற்றுடன் ஒத்த சொற்கள். போர் என்பது மனித நாகரிகத்தைப் போலவே பழமையானது. எந்தவொரு போரிலும் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. வன்முறை மற்றும் வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல். பாகிஸ்தானில் உள்ள அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆபரேஷன் சிந்தூரின் குறிக்கோளாக இருந்தது. பயங்கரவாத நடவடிக்கை மூலம் இந்தியாவை பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது.
கடந்த மாதம் 7 ம் தேதி தாக்குதல் நடத்த துவங்கிய போது, பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மோசமாக நடந்து கொண்டது. அப்போதும், நம் மீது தாக்குதல் நடத்தினால், ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால், இந்தியா பதில் தாக்குதல் நடத்தும். கடுமையாக தாக்குதல் நடத்தும் என்றோம்.
கடந்த 10ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், 48 மணி நேரத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தானின் லட்சியமாக இருந்தது. இதற்காக பல தாக்குதல்களை நடத்தினர். நாம் பயங்கரவாத முகாம்களை மட்டும் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த மோதலை பாகிஸ்தான் அதிகரித்தது.
பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது. இதனால், அந்நாடு போரை நிறுத்தி விட்டு பேச விரும்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்தது.
நீண்ட கால மோதலில் ஈடுபட நாம் விரும்பவில்லை. ஆபரேஷன் பராக்ரம் நடவடிக்கையில் நாம் அனுபவம் பெற்று உள்ளோம்.( ஆபரேஷன் பராக்ரம் என்பது கடந்த 2001 ம் ஆண்டு அக்., ஜம்மு காஷ்மீர் சட்டசபை மற்றும் டிச.,13ல் பார்லிமென்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டில் கோட்டு பகுதியில் ராணுவத்தை ஒன்று திரட்டவும், ராணுவ திட்டமிடலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை). 9 மாதங்கள் அங்கேயே இருந்தோம்.
இதில், ஏராளமான செலவுகள் உள்ளன. அனைத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. பாலகோட் தாக்குதலுக்கு பிறகு, படைகளை ஒன்று திரட்டுவதிலும் இதனை கண்டோம். தற்போது, படைகளை திரட்டுவதற்கு முன்னரே, நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை. அது இன்னும் தொடர்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.
பாகிஸ்தான் தரப்பை பொறுத்தவரை, நாம் இரண்டு யூகங்களை கணிக்க முடியும்.1. அவர்கள் அனைத்தையும் இழந்து கொண்டு இருந்தனர்.2. இந்திய நடவடிக்கை தொடர்ந்தால், இழப்பு இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். அதனால் தான் அவர்கள் போரை நிறுத்தும்படி தொலைபேசியை எடுத்தனர்.
போர் முறையில், ஆபரேஷன் சிந்தூர் புதிய வரலாற்றை படைத்து உள்ளது. எதிராளிக்கு எதிராக வெற்றிகரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆழமாகத் துல்லியமாகவும், தாக்குதல் நடத்த முடிந்தால் அது மிகப்பெரிய சாதனை. இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட போது, அது முக்கியமல்ல, போரின் முடிவும் எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதே முக்கியம் என்றேன்.
இழப்புகளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. உதாரணமாக டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால் இன்னிங்ஸ் வெற்றி பெற்றால், எவ்வளவு விக்கெட்டுகள், எவ்வளவு பந்துகள் மீதமுள்ளது போன்ற கேள்விகளுக்கே இடமில்லை. குறிப்பிட்ட தரவுகளை உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்வோம். எத்தனை விமானங்களை அழித்தோம், எத்தனை ரேடார்களை அழித்தோம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம் என முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொல்லாததையும் செய்து காட்டிய இந்தியா.. அழுது புலம்பிய பாகிஸ்தானால் வெளிவந்த உண்மை..!