×
 

என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் சுஷில் தாகே, நீட் மறுதேர்வு எழுதிய நிலையில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்டவற்றுக்கான நுழைவுத் தேர்வான நீட், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியத் தேர்வாகக் கருதப்படுகிறது. 

இந்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சர்ச்சையால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 22.7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த மறுதேர்வை எழுதினர்.

அந்த வரிசையில், ஹிங்கோலி பகுதியைச் சேர்ந்த சுஷில் தாகேவும் தேர்வு எழுதினார். தேர்வுக்குப் பிறகு அவர் மிகவும் சோர்வுடனும், மன உளைச்சலுடனும் காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். “தேர்வு சற்று கடினமாக இருந்தது” என்று அவர் வீட்டில் கூறியிருந்தார். தேர்வு முடிந்த சிறிது நேரத்திலேயே அவர் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அந்த வீடியோவில் தாயாரிடம் உருக்கமாக மன்னிப்புக் கேட்டுப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

“என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா… நான் எனது உயிரை எடுத்துக் கொள்ளப் போகிறேன். தயவுசெய்து கவலைப்படாதீர்கள். அடுத்த பிறவியில் மீண்டும் உங்கள் மகனாகப் பிறப்பேன். ஆனால் இப்படியான வலியை உங்களுக்கு தரமாட்டேன். என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை தனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு, சுஷில் அருகிலுள்ள கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மன அழுத்தம், போட்டித் தேர்வுகளின் தாக்கம் ஆகியவை குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.

நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. கல்வி அமைப்பில் மாணவர்களின் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
 

இதையும் படிங்க: நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share