போர்க்கால அடிப்படையில்.. 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரம்..!! NCERT தகவல்..!!
புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் போர்க்கால அடிப்படையில் அச்சிடப்பட்டு வருகின்றன.
புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF-SE 2023) அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 9-ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்களை இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புத்தகங்கள் மாணவர்களின் கற்றலை நவீனமயமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், புதிய கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இந்த பாடப்புத்தகங்கள் கிடைக்காத சிக்கல் எழுந்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் இந்த தட்டுப்பாட்டை வலியுறுத்தி புகார்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் NCERT ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “புதிய 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் போர்க்கால அடிப்படையில் அச்சிடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் வினியோகமும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!
சுமார் 1.5 கோடி புத்தகங்கள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 30 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அதிக அளவிலான தேவை காரணமாக சில இடங்களில் தற்காலிக வினியோக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக NCERT ஒப்புக்கொண்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு கல்வியாண்டு தொடங்க சற்று முன்பே பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல பள்ளிகளில் பாட வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பழைய புத்தகங்கள் அல்லது புகைப்பட நகல்களை நம்பி படித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலை NCERT உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அச்சிடும் வேகத்தை அதிகரித்து மே 31, 2026-க்குள் இலக்கை எட்டும் வகையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. வினியோகம் சீரடைந்து வருவதாகவும், விரைவில் அனைத்து இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.
மேலும், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க NCERT அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்களின் மென்பதிப்புகளை (PDF) இலவசமாக வெளியிட்டுள்ளது. ஆங்கிலம் (Kaveri), கணிதம் (Ganita Manjari), அறிவியல் (Exploration), இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல பாடங்களின் டிஜிட்டல் பதிப்புகள் இப்போது கிடைக்கின்றன. மாணவர்கள் ncerts website-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
கல்வியாளர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், அச்சு புத்தகங்களின் முழுமையான வினியோகம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். புதிய கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைய இத்தகைய சவால்களை சரியான திட்டமிடலுடன் கையாள வேண்டியது அவசியம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: தபால் ஓட்டை பிரிக்காமலே நிராகரிக்கலாம்!! இந்த 4 விஷயம் இருந்தால்!? தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு!