ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!
''நம் நாட்டில் எரிசக்தி ஆற்றலுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு, நம் கடற்படை போதிய பாதுகாப்பு அளித்து கடக்க உதவி வருகிறது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துஉள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நம் நாட்டில் தற்போது எரிபொருளுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. மேற்காசியப் போர் பதற்றத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி வரும் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல, இந்தியக் கடற்படை போதிய பாதுகாப்பு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“போர் பதற்றத்துக்கு இடையே வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி தூதரக ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
இதையும் படிங்க: கவலை வேண்டாம்! பாதுகாப்பான கைகளில் இந்திய நண்பர்கள்!! ஈரான் தூதரகம் தந்த வாக்குறுதி!
பாகிஸ்தான் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த அமைச்சர், “மேற்காசியப் போர் பதற்றத்தைப் பயன்படுத்தி தவறான வழியில் நடக்க பாகிஸ்தான் முயற்சித்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும். கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தான் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 35 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்றார்.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றத்துக்கு இடையே, எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகியவை தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: மிகப்பெரிய ஆறுதல்! மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!