பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூன் வெளியீடு!! நார்வே பத்திரிகை அத்துமீறல்! வலுக்கும் கண்டனம்!
பிரதமர் மோடியை பாம்பாட்டியாக சித்தரித்து நார்வே நாட்டு நாளிதழ் கார்ட்டூன் வெளியிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) குறித்து நார்வே நாட்டின் பிரபல நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடியை “பாம்பாட்டி” போல சித்தரித்த அந்த கார்ட்டூன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடான Norway-க்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்த மோடி, அந்நாட்டு பிரதமர் Jonas Gahr Støre-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். பின்னர் இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, இரு தலைவர்களும் பேட்டி முடித்து வெளியேறியபோது, நார்வே பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங் திடீரென கேள்வி எழுப்பினார். “இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை என்ன? பிரதமர் மோடி ஏன் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை?” என்று அவர் சத்தமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் இரு தலைவர்களும் அங்கிருந்து சென்றனர்.
இதையும் படிங்க: பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பத்திரிகையாளர் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அது வேகமாக வைரலான நிலையில், நார்வேயின் பிரபல நாளிதழான Aftenposten பிரதமர் மோடியை பாம்பாட்டி போல சித்தரிக்கும் கார்ட்டூனை வெளியிட்டது. இதுவே தற்போது சர்வதேச சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த கார்ட்டூன் குறித்து இந்திய சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன. “இந்தியா என்றாலே பாம்பாட்டிகள் என்ற காலனித்துவ மனநிலையிலிருந்து சில ஐரோப்பிய ஊடகங்கள் இன்னும் வெளியே வரவில்லை” என்றும், “இது அரசியல் விமர்சனம் அல்ல; இனவெறி கலந்த காட்சிப்படுத்தல்” என்றும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மறுபுறம், சிலர் இதை ஊடக சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கின்றனர். இருப்பினும், இந்த கார்ட்டூன் இந்தியா-நார்வே அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகங்களின் இந்தியா குறித்த பார்வை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: நியாபகம் இருக்கா 'Melodi'!! இத்தாலி பிரதமர் மெலோனியை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி!