கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!
வாகனங்கள் குறைக்கப்பட்டாலும், கட்டாயப் பாதுகாப்பு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
உலகம் முழுவதும் எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளன. இந்தியாவிலும் இந்த பாதிப்பு எதிரொலித்துள்ளது. சமீபத்தில் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மேலும் அதிகரிக்கும் விவாதங்கள் அரசு மட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய சூழலில், பொதுமக்களுக்கு எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் (Work From Home) முறையை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளும், சாத்தியமான அளவுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் மூலம் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும் என்பது அரசின் எதிர்பார்ப்பாகும். இந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!
சிறப்பு பாதுகாப்புப் படை (SPG)க்கு பிரதமர் மோடி நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன அணிவகுப்புகளை (Convoy) குறைப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான கட்டாய விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
‘புளூ புக்’ என்று அழைக்கப்படும் பிரதமரின் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும். தேவையற்ற மற்றும் இன்றியமையாததல்லாத வாகனங்களை மட்டும் நீக்கி, குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் நட்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை மனதில் கொண்டு, பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை அதிக அளவில் பயன்படுத்த பிரதமர் யோசனை வழங்கியுள்ளார்.
புதிய வாகனங்களை வாங்குவதற்கு அனுமதி இல்லை. தற்போது இருக்கும் வாகனங்களையே மேம்படுத்தி அல்லது மாற்றி அமைத்து பயன்படுத்த வேண்டும் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசு செலவினங்களைக் குறைப்பதோடு, பொதுமக்களுக்கு முன்மாதிரியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைத் தணிக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இத்தகைய சிக்கன நடவடிக்கைகள், அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களும் இந்த முயற்சியில் தங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக முதல்வர் விஜய்யின் அடுத்த பிளான்..!! பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க திட்டம்..!!