×
 

உலகம் இந்திய ஸ்டார்ட்அப்களை தேட வேண்டும்! ஸ்டார்ட்அப் CEO-க்களுக்கு மோடியின் அதிரடி இலக்கு

முடிவுகளை அடிக்கடி மாற்றினால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்பவர்களுக்கு நம்பிக்கை குறையக்கூடும் என்பதால், நீண்டகால கொள்கை நிலைத்தன்மை அவசியம் என அவர் தெரிவித்தார்.

புதுடில்லி: இந்தியாவின் விண்வெளித்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உள்நாட்டு விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய விண்வெளி நிறுவனங்கள் உலகளவில் திறமையாளர்களையும் முதலீடுகளையும் ஈர்க்கும் அளவுக்கு வளர வேண்டும் என்றும், உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டில்லியில் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், புதிய துறையில் துணிச்சலுடன் காலடி எடுத்து வைத்துள்ள தொழில்முனைவோரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபடுவதற்கு அரசின் மீது தொழில்துறையினர் வைத்துள்ள நம்பிக்கை முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் தொடர்ந்து நிலையானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். முடிவுகளை அடிக்கடி மாற்றினால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்பவர்களுக்கு நம்பிக்கை குறையக்கூடும் என்பதால், நீண்டகால கொள்கை நிலைத்தன்மை அவசியம் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிலவில் இந்தியாவின் வரலாற்று தடம்! கனவுகள் இன்னும் பெரிதாகட்டும்! தேசிய விண்வெளி தினத்தில் மோடி வாழ்த்து!

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சி உலகம் முழுவதிலிருந்தும் திறமையாளர்களை இந்தியாவுக்கு ஈர்க்கும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார். அதேபோல், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் இது அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆபத்துகளை எதிர்கொள்ளும் துணிச்சல் இந்தியர்களிடம் இயல்பாகவே இருப்பதாக குறிப்பிட்ட மோடி, அந்த திறனை விண்வெளித்துறையில் பயன்படுத்தி இந்தியா தனக்கென வலுவான இடத்தை வேகமாக உருவாக்க வேண்டும் என்றார். விண்வெளி தொழில்நுட்பத்தை ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பயன்பாடுகளுடன் மட்டும் நிறுத்தாமல், அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் மிகப்பெரிய திருப்புமுனைகளை உருவாக்கும் நிலையை நாடு அடைய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். எதிர்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி நிறுவனங்களும், திறமையாளர்களும், “இந்தியாவுக்கு வாருங்கள்; இந்திய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுங்கள்” என்று கூறும் சூழல் உருவாக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோடியின் 25 ஆண்டுகள் ஆட்சி! செப்டம்பர் 17 முதல் பாஜக செய்யப்போகும் மெகா பிளான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share