பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்!! செமிகண்டக்டர் ஆலை பணியாளர்களுடன் கலந்துரையாடிய மோடி!
குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள அதிநவீன செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து ஆய்வு செய்தார். இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் செமிகண்டக்டர் மிஷனின் கீழ் முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நான்கு திட்டங்களில் ஒன்றாகும். ரூ.7,500 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலை, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலையைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் உரையாடினார். இந்த உரையாடலின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மோடி, பெண் சக்தியின் மீது தனக்கு இருக்கும் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
பிரதமர் மோடி தனது பதிவில், “சனந்த் செமிகண்டக்டர் ஆலையின் திறப்பு விழாவின் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்று, அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் உரையாடிய வாய்ப்பு. இந்த ஆலையில் பணியாற்றும் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பலர் பழங்குடியினப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!
ஆனால், அவர்களின் மன உறுதியும், கற்றல் ஆர்வமும் அவர்களை செமிகண்டக்டர் துறையில் திறம்பட பணியாற்ற வைத்துள்ளது. பயிற்சி பெற்று இன்று இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கு வலு சேர்க்கிறார்கள். இந்தப் பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.
இந்த ஆலை தொடங்கப்பட்டதன் மூலம், உயர் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்பது முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. தொலைதூர கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்கள் நவீன தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு பெறுவது, பெண் முன்னேற்றத்துக்கு புதிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
பிரதமரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மோடியின் வார்த்தைகள் பலரையும் ஈர்த்துள்ளன. இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தியில் சுயசார்பு நோக்கத்தை நோக்கி நகரும் நிலையில், பெண்களின் பங்களிப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
இந்தத் திட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் செமிகண்டக்டர் ஆலைகள் அமைய வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை, நாட்டின் இளம் பெண்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை இன்று துவக்கம்!! யாத்திரிகர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளை!!