பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!
பிரதமர் நரேந்திர மோடி தூங்கமாட்டார், தன்னைப்போன்று அதிகாலை எழுந்துகொள்வார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்பட்ட ஒரு கருத்து தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. “பிரதமர் மோடி தூங்க மாட்டார். என்னைப் போலவே அதிகாலையில் எழுந்து பணியில் ஈடுபடுவார்” என்று டிரம்ப் கூறியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கா–இந்தியா உத்திசார் கூட்டாண்மை மன்ற உச்சி மாநாட்டில் பேசிய செர்ஜியோ கோர், டிரம்புடன் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவுகூர்ந்தார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு மியாமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்புடன் இருந்தபோது, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு டிரம்ப் கூறியதாக அவர் தெரிவித்தார்.
அப்போது இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி என்பதால், தற்போது அழைப்பது சரியாக இருக்குமா என்று தான் தயங்கியதாக செர்ஜியோ கோர் கூறினார். அதற்கு பதிலளித்த டிரம்ப், “பிரதமர் மோடி தூங்க மாட்டார். அவர் ஏற்கனவே எழுந்திருப்பார். அவர் என்னைப் போன்றவர்” என்று சிரித்தபடி கூறியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: தமிழக பாஜகவை பலப்படுத்த அமித்ஷா ஆயத்தம்! நேரடியாக களமிறங்க முடிவு! காத்திருக்கும் அசைன்மெண்ட்!
இந்த சம்பவம் இரு தலைவர்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாகவும், உண்மையான நட்பு இருந்தால் நேரம் அல்லது சூழ்நிலை குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதில்லை என்பதையும் டிரம்ப் தனது கருத்தின் மூலம் வெளிப்படுத்தியதாக செர்ஜியோ கோர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி அந்த நம்பிக்கைக்கு தகுதியான தலைவர் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், விமானத் துறை, பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா–அமெரிக்கா உறவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். டிரம்ப் குறித்து செர்ஜியோ கோர் பகிர்ந்த இந்த தகவல் தற்போது அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம்! 3 போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு! அசர வைக்கும் தொழில்நுட்பம்! மிரட்டல்!