×
 

கதறும் கடவுளின் தேசம்... 2வது நாளாக தொடரும் மீட்புபணி... மோப்ப நாய்களை களமிறக்கிய மீட்புக்குழு...!

வயநாடு நிலச்சரிவு: 2-வது நாளாக தீவிர மீட்புப் பணி; 5 பேரை தேடும் பணி தொடர்கிறது

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வயநாட்டில் இருந்து கோழிக்கோடு செல்லும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கல்லாடு பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை முதல் வயநாடு மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது. நேற்று அந்த மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த கனமழையால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் மண்ணில் சிக்கினர். தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, 9 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.800 கோடிப்பே... தவெகவை வளர்க்க கோடிகளை கொட்டிக்கொடுத்த சாராய ஆலை உரிமையாளர்கள்... ஆர்.பி.உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு...!

நிலச்சரிவு ஏற்பட்ட தருணத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மண், கற்கள் மற்றும் வெள்ளநீர் வேகமாக சரிந்து வந்த நிலையில், ஐந்து பேர் உயிர் தப்பிக்க ஓடி தப்பிய காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

உயிர் தப்பியவர்களில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி பால்ராஜ் மற்றும் அவரது மனைவியும் உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட தருணம் குறித்து பால்ராஜ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "சாலையைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் இருந்து பெரும் வேகத்தில் தண்ணீரும், சகதியும் வந்தது. திரும்பிப் பார்த்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஓட முடியாத சூழ்நிலை. குடையைப் பிடித்தபடியே ஓட முயன்றேன். திடீரென சகதி வந்து காலில் மோதியதால் கீழே விழுந்துவிட்டேன். பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

கண் விழித்தபோது லாரியின் அடியில் மண்ணில் புதைந்தபடி கிடந்தேன். அருகில் யாரோ அழும் சத்தம் கேட்டது. என் மனைவி என்னை கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவிக்கு வந்தனர். பாலத்தின் கீழே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இருவரை மீட்டனர். அதன் பிறகே எங்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அந்த லாரிதான் எங்கள் உயிரைக் காப்பாற்றியது. லாரி இல்லையென்றால் நாங்கள் உயிர் தப்பியிருக்க முடியாது. அந்த நேரத்தில் எங்கள் இரண்டு குழந்தைகள்தான் நினைவுக்கு வந்தார்கள்," என்றார்.

இதற்கிடையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாமில் தங்கியுள்ள பெண் ஒருவர் கூறுகையில், "கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. நேற்று காலை மழை மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது நாங்கள் அனைவரும் பயத்துடன் வீட்டிலேயே இருந்தோம். பின்னர் பாதுகாப்பு கருதி எங்களை முகாமுக்கு அழைத்து வந்தனர். இங்கு உணவு, தேநீர், படுக்கை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். இன்னும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது," என்றார்.

தற்போது பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் மொத்தம் 18 பேர் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மண்ணுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறிவதற்காக மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு இரண்டாவது நாளாக தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளில் சிரமம் நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட்டில் திறப்பு..? பணிகளை முடிக்க மும்முரம்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share