காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள், 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர் பிழைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. நீர்மின் திட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்திற்குள் செல்வதும், சிக்கியவர்களை மீட்பதும் சவாலான பணியாக இருந்தது.
இதையும் படிங்க: பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!
சுமார் 9 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற தீவிர மீட்பு நடவடிக்கையில் முதலில் ஒரு தொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இதனை நேபாள எரிசக்தித்துறை அமைச்சர் பிராஜ் பக்த ஸ்ரேஸ்தா உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மற்றொரு தொழிலாளரும் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட இருவரும் 45 வயதான கபீர் மஹர்ஜன் மற்றும் 30 வயதான சஞ்சய் சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக அவர்களின் நிலை குறித்து கவலையில் இருந்த உறவினர்களுக்கு இந்த மீட்பு செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய தொழிலாளர்களில் பலரின் நிலை குறித்தும் கவலை நீடித்து வருகிறது.
இந்த சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுரங்கத்திற்குள் 9 நாட்கள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!