தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓட்டு எண்ணும் அறைக்குள் சீருடையுடன் அல்லது சீருடை இல்லாத போலீசாரை அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது.
ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23 அன்று முடிந்துவிட்ட நிலையில், மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணி தொடங்கும். அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டு எண்ணும் பணி துவங்கும். ஓட்டு எண்ணும் அறைக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அழைத்தால் மட்டுமே போலீசார் உள்ளே செல்ல முடியும். மற்ற நேரங்களில் அவர்களுக்கு அனுமதி இல்லை.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், மைக்ரோ அப்சர்வர்கள், உதவியாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மட்டுமே அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரங்களை கரும்பலகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிவையும் ஊடகங்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தபால் ஓட்டை பிரிக்காமலே நிராகரிக்கலாம்!! இந்த 4 விஷயம் இருந்தால்!? தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு!

வெற்றிக்கான இடைவெளி, பெறப்பட்ட தபால் ஓட்டுகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால், தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணலாம். ஓட்டு எண்ணிக்கை கடைசி சுற்று முடிந்ததும், ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஓட்டுச்சாவடிகளின் விவி பேட் இயந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள பேப்பர் சிலிப்களை சரிபார்க்க வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீலிட வேண்டும். கன்ட்ரோல் யூனிட்டில் ரிசல்ட் பகுதியை மூடி, தேர்தல் நடத்தும் அலுவலரின் முத்திரையுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் ரகசிய முத்திரையை இட வேண்டும். அனைத்து தேர்தல் ஆவணங்களையும் உலோக டிரங்க் பெட்டியில் வைத்து இரண்டு பூட்டுகள் போட்டு சீலிட வேண்டும். ஒரு சாவியை தேர்தல் அதிகாரி வைத்திருக்க வேண்டும், மற்றொன்றை கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை முடிவுற்ற 24 மணி நேரத்துக்குள் ரகசிய முத்திரையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் ஓட்டு எண்ணிக்கையை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த உதவும்.
இதையும் படிங்க: ஓட்டு எண்ணும் போது சிரிக்கக்கூடாது! கூடுதல் கவனம் தேவை! தேர்தல் அலுவலர்களுக்கு கறார் உத்தரவு!