திருச்சியில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் அரசு செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தனது அதிரடி மற்றும் கனிவான மக்கள் நலக் கரங்களை நீட்டியுள்ளது. மாணவியின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான்நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்திற்கு இன்று காலை நேரில் சென்ற தவெக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் ஆகியோர், உயிரிழந்த மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களான சேட்டு – கலைச்செல்வி தம்பதியரின் 19 வயது மகள் சீதாலட்சுமி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். மூக்கில் ஏற்பட்ட சதை வளர்ச்சிக்கான எளிய அறுவை சிகிச்சையின் போது, அதிகப்படியான மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதால் அவர் திடீரென மரணமடைந்தார். சக மாணவிகள் மற்றும் உறவினர்களின் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட மாணவி சீதாலட்சுமியின் உடல், இன்று காலை தொண்டமான்நல்லூர் மயானத்தில் கண்ணீர் மல்க நல்அடக்கம் செய்யப்பட்டது.

மாணவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் ஆட்சியர் அருணா, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சீதாலட்சுமியின் குடும்பத்திற்குப் பல்வேறு அதிரடி உதவிகளை ஸ்பாட்டிலேயே வழங்கினர். அதன்படி, பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையான இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்குப் பொருளாதார அரணாக விளங்கும் வகையில், சீதாலட்சுமியின் மூத்த சகோதரி புவனேஸ்வரிக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுத் தற்காலிகப் பணி நியமன ஆணையை அமைச்சர் பர்வேஸ் உடனடியாக வழங்கினார்.
இதையும் படிங்க: "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ், "மாணவி சீதாலட்சுமியின் மரணம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில், இந்த மரணத்திற்குத் காரணமான மருத்துவக் கவனக்குறைவு குறித்துத் துல்லியமாக விசாரிக்க உயர் மட்டத் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மருத்துவர்களோ, ஊழியர்களோ யாராக இருந்தாலும் தவறு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது எவ்விதப் பரிந்துரையுமின்றி மிகக் கடுமையான கிரிமினல் நடவடிக்கை பாயும்" என்று அதிரடியாக எச்சரித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!