சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்குகளை திரும்பப் பெற ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர்.
2022 ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தார். ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
அந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டது. மேலும் பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடுத்த வழக்குகள் இதுவரை நிலுவையில் இருந்தன.
இதையும் படிங்க: #BREAKING: தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! உதயநிதி, EPS, OPS பதவியேற்பு..!

தற்போது பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.விலும், ஜே.சி.டி. பிரபாகரன் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்துள்ள நிலையில், இந்த வழக்குகளை திரும்பப் பெற அனுமதி கோரி உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு கடிதம் அளித்துள்ளனர்.
நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்பு நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்த விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். அதேபோல், கட்சி நடவடிக்கைகளில் தலையிட தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினருக்கு விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் பட்சத்தில், அதிமுகவுக்குள் நீண்டகாலமாக நீடித்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிம்மதி பெருமூச்சு விடும் எடப்பாடி பழனிசாமி! சென்னை ஹைகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பால் ஹாப்பி!