பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான விலைமதிப்பற்ற நிலத்தைச் சுற்றி வெடித்த மோசடி விவகாரம், தமிழகத்தின் பதிவுத்துறை மற்றும் கோயில் நிலப் பாதுகாப்பு தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 1.40 ஏக்கர் நிலம், சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலம், ஜூலை 6 ஆம் தேதி போலி ஆவணங்கள் மூலம் வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம் வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் இருந்த நிலையில், பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் இந்தப் பத்திரப்பதிவை முடித்து வைத்தார். நீதிமன்ற உத்தரவு மற்றும் கோயில் நிர்வாகத்தின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் இந்தப் பதிவு நடைபெற்றது என்பது பின்னர் தெரியவந்தது.இந்தச் சம்பவம் வெளியானதும் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

பத்திரப்பதிவுத் துறை ஜஸ்டின் மணிகண்டனை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டதையொட்டி, நிலத்தை விற்றதாகக் கூறப்படும் முருகதாஸ், அதை வாங்கிய வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி, மேலும் இந்தப் பரிவர்த்தனைக்கு உதவியதாகச் சொல்லப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.ஜஸ்டின் மணிகண்டன் தனக்கு எதிரான கைது நடவடிக்கையைத் தவிர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வை நாடினார். நீதிமன்றம் அவருக்கு ஆகஸ்ட் 4 வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. அதோடு திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது.
இதையும் படிங்க: டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!
அதன்படி அவர் பல நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் விசாரணை முன்னேற்ற அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிமன்றம், (நேற்று) ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இடைக்காலப் பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றம், பதிவுச் செயல்முறையில் அவர் நல்லெண்ணத்துடன் செயல்படவில்லை என்றும், பிற குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டதாகவும் குறிப்பிட்டது. விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் முன்ஜாமீன் வழங்க இயலாது என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவுக்குப் பின்னர் சிபிசிஐடி போலீசார் இன்று ஜஸ்டின் மணிகண்டனைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!