பழனி கோவில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலம், 1888-ஆம் ஆண்டு குப்புசாமி மணியக்காரர் என்பவரால், இந்து மதத்தைப் பரப்பவும், பக்தர்களுக்கு உதவவும் உள்ளிட்ட தர்ம நோக்கங்களுக்காக, தர்ம சாசனத்தின் அடிப்படையில் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!
இந்த நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பழனி கோவில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், விடுமுறை நாளில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை அமைத்ததாகக் கூறப்படும் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி அஜயதங்கம் தலைமையிலான அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், தென்மண்டல எஸ்பி சாஜிதா நேரடியாக பழனிக்கு வந்து, கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
மேலும், ஓய்வு பெற்ற இணை ஆணையர் மாரிமுத்து, வட்டாட்சியர் மாரியப்பன், ஓய்வு பெற்ற விஏஓ சின்னசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 1888-ஆம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நிலத்தின் வகைப்பாடு மற்றும் உரிமை தொடர்பான ஆவணங்கள் தீவிரமாக சரிபார்க்கப்பட்டன.
நேற்று மற்றும் நேற்று முன்தினம், இந்த நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம், திண்டுக்கல்லில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மணத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த 60 வயதான வெள்ளத்துரை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நிலத்தை வாங்கியவராவார்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், தண்டபாணி மடத்தின் வாரிசுதாரர் என போலியாகக் கூறி, அறக்கட்டளை உருவாக்கி நிலத்தை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவைச் சேர்ந்த அன்வர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பத்திரப்பதிவில் சாட்சியாக கையெழுத்திட்டவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அதேநேரத்தில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இதுவரை கைது செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய முன்ஜாமீன் காரணமாக அவர் இரண்டு முறை மட்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
இவர்களுக்கு எதிராக கைதானவர்களின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், ஜஸ்டின் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிசிஐடி நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரத்தில் அதிரடி திருப்பம்... சிபிசிஐடி விசாரணை வளையத்தில் முக்கிய புள்ளி...!