அழகென்ற சொல்லுக்கு முருகா... தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிவிடும். குறிப்பாக தைப்பூசம், பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பர். இதேபோல பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தை கிருத்திகை உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். பழனி கோயிலில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..! திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!
மேலும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் 690 படிகள் ஏறமுடியாத வயதானவர்கள், சிறுவர்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு விஷேச நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்கள் கோவிலில் தரிசனம், நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பின்பு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் எண்ணி அளவிடப்படுகிறது.
அதன்படி நேற்று, பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதையொட்டி பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்ட உண்டியல்கள் எடுத்து வரப்பட்டு, அதில் செலுத்தப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்கம், வெள்ளியிலான நகைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 256 கிடைத்தது. மேலும் தங்க பொருட்கள் 5 ஆயிரத்து 5 கிராம், வெள்ளி 11 கிலோ 438 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 1,324-ம் கிடைத்தன என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 5,005 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க.. ஒரு மாதத்திற்கு பழனி முருகன் கோவிலில் இது கிடையாதாம்..!