சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தலைவர் விஜய் பங்கேற்கவிருந்த மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் கூட்ட ஏற்பாடுகள் தற்போது தடைபட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. விஜய் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார். இந்தத் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த தவெக நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி இரவு, சேலம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!” மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!
மேலும், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையிலான குழு, சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரியை சந்தித்து அனுமதி கோரி வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது கூட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை (SOP) பின்பற்றாமல் மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, 5,000 பேர் வரும் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்பு மனு அளிக்க வேண்டும். 30,000 பேர் வரும் என்றால், அதற்கு மேல் கூடுதல் மக்கள் வருவதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், இடத்தின் தகுதியை உறுதிப்படுத்த பொதுப்பணித் துறை சார்பில் சான்று தேவைப்படும்.
இந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாததால், சமர்ப்பிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டு, நிர்வாகிகளிடம் திருப்பி அளிக்கப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி இது குறித்து விளக்கமளித்தபோது, “அரசு வழிகாட்டுதல்களின்படி மனு தாக்கல் செய்யப்படவில்லை. முறையான விவரங்களுடன் மனு அளித்தால், கோரிய தேதியில் அனுமதி வழங்கப்படும்” என்று கூறினார்.

இதனால், தவெகவினரின் பிரச்சாரத் திட்டங்கள் சேலத்தில் தற்காலிகமாக தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி புதிய மனு அளிக்கும்பட்சத்தில், கூட்டத்திற்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள தவெக இந்தத் தடையை எவ்வாறு சமாளிக்கும் என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!