பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒலிபரப்பான 134-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள், சோழர் கால வரலாற்றுச் செப்பேடுகள், கடும் வெப்பநிலை மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.
உரையின் தொடக்கத்தில் இந்திய விளையாட்டு வீரர்களின் சமீபத்திய சாதனைகளை பிரதமர் பாராட்டினார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகளப் போட்டியில் பல தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டது இந்திய விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர், விஷால் டி.கே., தேஜஸ்வின் சங்கர், தேவ் மீனா மற்றும் குல்தீப் குமார் உள்ளிட்ட வீரர்களின் சாதனைகள் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய மோடி, சமீபத்தில் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வு நடைபெற்றதாக தெரிவித்தார். சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய செப்பேடுகள் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகவும், இது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். அந்த செப்பேடுகள் சோழப் பேரரசின் வரலாறு, கலாசாரம் மற்றும் நிர்வாகத் திறமைகளை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்-யின் கோரிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல்!! டிக் அடித்தார் பிரதமர் மோடி! டெல்லியில் பரபரப்பு!

சோழர்களின் கடல் வாணிப ஆற்றல் மற்றும் உலகளாவிய செல்வாக்கு குறித்து அறிந்தபோது வியப்பும் பெருமையும் ஏற்பட்டதாக மோடி குறிப்பிட்டார். விரைவில் அந்த வரலாற்று ஆவணங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவசியமில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மா சாகுபடியில் சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாயிகளை பாராட்டிய அவர், இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார். இறுதியாக, சமூக நலனுக்காக அமைதியாக உழைத்து வரும் மக்களை கண்டறிந்து பாராட்ட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் சமூகத்திற்கு பயனுள்ள பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்! பிரதமர் மோடி வலியுறுத்தல்!