இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படும் நாளாக இன்று மாறியுள்ளது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நீண்டகால பிரதமர் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று சமன் செய்து, அதனை முறியடிக்கும் நிலையை எட்டியுள்ளார். இதையொட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
நரேந்திர மோடி கடந்த 2014 மே 26ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக பதவியேற்றார். அதன் பின்னர் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை பதவியில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்திய அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்த சாதனை இதுவரை ஜவஹர்லால் நேருவிடம் இருந்தது. அவர் 1952 மே 13ஆம் தேதி முதல் 1964 மே 27ஆம் தேதி வரை மொத்தம் 4,398 நாட்கள் பிரதமராக பணியாற்றினார். தற்போது அதே கால அளவை எட்டியுள்ள பிரதமர் மோடி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்டகாலம் பதவி வகித்த தலைவர்களின் பட்டியலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது! நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

இதற்கு முன்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தொடர்ச்சியான பிரதமர் பதவிக்கால சாதனையையும் மோடி கடந்த காலத்தில் முறியடித்திருந்தார். இந்த நிலையில், நேருவின் சாதனையை கடந்துள்ளதை முன்னிட்டு பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயமாக இந்த நாள் பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் இந்த நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை!! பாஜக தலைமையுடன் சமரசமா? தனிக்கட்சியா?