சென்னை: சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அ.தி.மு.க., பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பா.ம.க.,வை புறக்கணித்ததால் அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., 18 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்ற த.வெ.க., தர்மபுரி, அரியலூர், சேலம், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற முடியவில்லை. இந்த மாவட்டங்களில் வன்னிய சமுதாய வாக்குகள் த.வெ.க.,வுக்கு கிடைக்காததால் அ.தி.மு.க., ஒரளவு வெற்றி பெற முடிந்ததாக பா.ம.க.,வினர் உறுதியாக நம்புகின்றனர்.
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் வன்னியர் ஓட்டுகளை பிரிக்க முயன்றாலும், பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் சரியான உத்தியுடன் காய் நகர்த்தியதால் இந்த வெற்றி சாத்தியமானதாக பா.ம.க.,வினர் கூறுகின்றனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அன்புமணியையோ, வெற்றி பெற்ற பா.ம.க., எம்.எல்.ஏ.க்களையோ பழனிசாமி இதுவரை சந்திக்கவில்லை. இது பா.ம.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கான முன்னுரிமை தொடர வேண்டும்! மாநிலத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது - அன்புமணி!

புதுச்சேரியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தியபோது, “நல்லது நடக்கும், பொறுத்திருங்கள்” எனக் கூறினார். இதற்கு பா.ம.க.,வினர், “நாங்கள் இல்லாமல் நல்லது நடக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச பா.ம.க., தலைமை பழனிசாமியை சந்திக்க முயற்சித்தது. தர்மபுரியில் வெற்றி பெற்ற சவுமியா உள்ளிட்ட வேட்பாளர்கள் வாழ்த்து பெற விரும்பினர். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
தேர்தல் தோல்விக்குப் பின் சில நாட்கள் சென்னை கிரீன்வேஸ் சாலை அரசு பங்களாவில் தங்கியிருந்த பழனிசாமி, நேற்று முன்தினம் புதுச்சேரி சென்றார். இதற்கு முன் பா.ம.க., எம்.எல்.ஏ.க்களை சந்திப்பார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பா.ம.க., வட்டாரங்கள் கூறுகையில், “பழனிசாமி எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும்” என வலியுறுத்தியுள்ளனர். தேர்தலில் பா.ம.க., கொடுத்த உதவியை பழனிசாமி அங்கீகரிக்காதது கூட்டணி உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி அ.தி.மு.க.,-பா.ம.க., உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அன்புமணி பிரசாரத்தில் புகுந்த வீரப்பன் மகள்! சேலத்தில் திடீர் பரபரப்பு!! வித்யா ராணி கைது!