தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 24,025 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், சரித்திரப் பதிவேடு இல்லாத தொடர் குற்றவாளிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் ஆகியோரை வகைப்படுத்தி கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது 24,025 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் குற்றச் செயல்களில் தொடர்புடைய 949 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு புது குடைச்சல்... ஆளுநர் காதுகளை எட்டிய முக்கிய குற்றச்சாட்டு... தவெக தலையில் இறங்கியது பேரிடி...!
மேலும், பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணைகளை (NBW) நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2,385 பிடி ஆணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்து, நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணைகளை முழுமையாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், வழக்கமான சோதனைகளுடன் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டு குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடுப்புக் காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், பிடி ஆணைகளை விரைந்து நிறைவேற்றுதல் மற்றும் சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்ந்த தரத்தில் பராமரிப்பதற்கும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.800 கோடிப்பே... தவெகவை வளர்க்க கோடிகளை கொட்டிக்கொடுத்த சாராய ஆலை உரிமையாளர்கள்... ஆர்.பி.உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு...!