``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை டெல்லியில் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
பாஜக தேசிய தலைவரிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை டெல்லியில் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணாமலை சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் தேசிய தலைவருடன் என்ன பேசினார் என்பது தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டு, தனது கருத்துகளை கடிதமாக நிதின் நபினிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நிதின் நபினை மட்டுமின்றி, பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷையும் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அரசியல் ரீதியாக பி.எல். சந்தோஷ் தான் அண்ணாமலையின் வழிகாட்டியாக கருதப்படுவதால், அவரிடமும் தனது மனக்குமுறல்களை அண்ணாமலை பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?
தேசிய தலைவருடன் நடைபெற்ற சந்திப்பில், ‘தான் பாஜகவிலிருந்து விலக விரும்புகிறேன். ஆனால் அது எந்தவிதமான மனக்கசப்பும் இல்லாமல், சுமூகமான முறையில் இருக்க வேண்டும்’ என்ற தனது எண்ணத்தை அண்ணாமலை தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கான காரணமாக, கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த தனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, நாயினார் நாகேந்திரன் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டபோது, அண்ணாமலையின் திறமையை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு கடந்தும் மாநில அல்லது தேசிய அளவில் எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தாம் முன்வைத்த பல ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் போதிய முக்கியத்துவம் பெறவில்லை என்றும், அவை பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, கட்சியிலிருந்து விலகுவது குறித்து சிந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தேசிய தலைவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அண்ணாமலை தற்போது எந்தவொரு கட்சிப் பதவியிலும் இல்லாததால், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சாதாரண கட்சித் தொண்டராகவே உள்ளார். இந்த நிலையில், கட்சியிலிருந்து விலக விரும்புவதாக தனது எண்ணத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அதிகாரப்பூர்வமாக விலகல் கடிதம் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலளித்த நிதின் நபின், ‘இந்த விவகாரம் குறித்து மேலும் பேசலாம். நீங்கள் கட்சியில் தொடர்ந்தால் தேசிய அளவில் உங்களுக்கு பொருத்தமான பொறுப்பு வழங்கப்படும்’ என கூறி அண்ணாமலையை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் குறித்து அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடமும் விவாதிக்கப்படும் என்றும், பின்னர் கட்சித் தலைமையிலிருந்து அவரை மீண்டும் தொடர்புகொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பு முடிந்த பிறகு அண்ணாமலை டெல்லி விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அவர் அமித்ஷாவையும் சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இறுதியில் நிதின் நபினை மட்டும் சந்தித்துவிட்டு தனது பயணத்தை முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்களை சந்திப்பது குறித்து கேட்டபோது, ‘டெல்லியில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. சென்னை திரும்பிய பிறகு உரிய நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன்’ என்று அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அண்ணாமலை சென்னை திரும்பிய பிறகு அவர் அளிக்கக்கூடிய விளக்கம் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!