×
 

பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் விஜய் இன்று நடத்தினார். தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இந்த மாத இறுதிக்குள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து துறைகளின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் குறித்து முதல்வர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

காலை மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக நடைபெற்று வரும் இந்த ஆய்வுக் கூட்டங்களில் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். ஏற்கனவே கூட்டுறவு, உணவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று உயர்க்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள், மாணவர்களுக்கு பயன்படும் அறிவிப்புகள், அரசு கல்லூரிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகள், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் நீண்ட காலமாக கவனம் பெற்றுள்ள துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: மாதம் ரூ.2,500! வருசம் 6 கேஸ் சிலிண்டர்!! பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு எது?! முதல்வர் விஜய் ஆலோசனை!

மேலும், வரவிருக்கும் பட்ஜெட்டில் உயர்க்கல்வித்துறைக்கான புதிய திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு துறையும் தங்களது முன்னுரிமை திட்டங்களை இறுதி செய்து நிதித்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பும் பணிகள் தற்போது வேகமடைந்துள்ளன.

பட்ஜெட் தாக்கலுக்கு மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளதால், ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துறை செயலர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விரிவான அறிக்கைகளை தயார் செய்து நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து வரும் நாட்களிலும் பல்வேறு துறைகளுடன் முதல்வர் விஜய் ஆய்வுக் கூட்டங்களை நடத்தவுள்ளார். ஜூலை 22-ஆம் தேதி வரை இந்த ஆலோசனைகள் நடைபெற உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இறுதி கட்ட பட்ஜெட் அறிவிப்புகள் வடிவமைக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள், இந்தாண்டு தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய திட்டங்கள் மற்றும் மக்கள் நல அறிவிப்புகளுக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆய்வுக்கு இதெல்லாம் முக்கியம்! சின்ன தப்பு கூட நடக்கக்கூடாது! துறை செயலர்களுக்கு உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share