முதல்வர் விஜய் போட்டோவை என் ஆபிசில் வைக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் கோவை திமுக மேயர்!
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தன் அறையில், முதல்வர் விஜய் போட்டோவை வைக்க மறுப்பு தெரிவித்து, கோவை தி.மு.க., பெண் மேயர் அடம் பிடிப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை: முதல்வர் விஜய் புகைப்படத்தை தன் அறையில் வைக்க மறுப்பு தெரிவித்து கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் முதல்வர் விஜய் புகைப்படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், கோவை மாநகராட்சியில் இந்த மறுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளின் அறைகள் மற்றும் கூட்ட அரங்குகளில் முதல்வர் விஜய் படம் ஏற்கெனவே மாட்டப்பட்டுள்ளது. துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் தங்கள் அறைகளில் படத்தை வைத்துள்ளனர். ஆனால், மேயர் ரங்கநாயகி தனது அறையில் முதல்வர் படம் வைப்பதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
மேயர் அறைக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. முதல்வர் விஜய் படத்தை அறைக்கு வெளியே சிறிய அளவில் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும், உள்ளே வைக்க மாட்டேன் என மேயர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்? எஸ்.பி வேலுமணி தரப்பினருக்கு அமைச்சர் பதவி? புதிய அமைச்சர்கள் யார்?
மேயர் ரங்கநாயகியிடம் கேட்டபோது, “எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் எங்கள் கட்சித் தலைவர்களின் படங்களை எடுக்க முடியாது. அவர்களைப் பார்க்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. முதல்வர் படத்தை அறைக்கு முன்பு வைத்திருக்கிறோம். எனது பதவிக்காலம் 2027 ஜனவரி வரை உள்ளது. அதுவரை என் அறைக்குள் முதல்வர் விஜய் படம் வைக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.
மேயர் மட்டுமின்றி, சில மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களும் தங்கள் அறைகளில் முதல்வர் படம் வைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை தி.மு.க.வுக்குள் உள்ளூர் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தரப்பில் அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்தை மேயர் அறையில் வைக்க மறுப்பது முதல்வரை அவமானப்படுத்தும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த சர்ச்சை கோவை மாநகராட்சியில் புதிய அரசியல் புயலை கிளப்பியுள்ளது. மேயரின் இந்த அணுகுமுறை பலரது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!