×
 

இது அதிக பிரசங்கித்தனம்! எங்களை யாரும் கேட்கல! பிரவீன் சக்ரவர்த்திக்கு சிபிஎம் கண்டனம்! கூட்டணி பெயரால் சர்ச்சை!

கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ, மாநிலங்களவை வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ தங்களை யாரும் அணுகவில்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவை இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தியின் சமூக வலைதள பதிவு, தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது பதிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காலியாகியுள்ள இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தவெக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தன்னை “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி”யின் முதல் மாநிலங்களவை வேட்பாளர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: தவெக + காங்கிரஸ் கூட்டணி பெயர் வச்சாச்சு?! முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு!

மேலும் அந்த கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு வெளியானதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ, மாநிலங்களவை வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ தங்களை யாரும் அணுகவில்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மேலும், புதிய கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி, அதில் சிபிஐ(எம்) பெயரையும் இணைத்திருப்பது தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். பிரவீண் சக்ரவர்த்தியின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்றே கூற வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தவெக தலைமையிலான கூட்டணி அரசியலில் புதிய விவாதம் உருவாகியுள்ளது. இந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் மற்றும் பிரவீண் சக்ரவர்த்தி தரப்பில் இருந்து என்ன விளக்கம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு நாளிலேயே ஏகப்பட்ட கூத்து... குளறுபடி..! பொளந்தெடுத்த H. ராஜா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share