தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு!! 2 மருத்துவர்களிடம் தீவிர விசாரணை!
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ₹35 கோடி பேரம் பேசிய வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்குமாறு தொலைபேசியில் பேரம் பேசியதாக புகார் அளித்தார். இதன்பேரில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் அரும்பாக்கம் யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர்களில் முக்கிய ஐந்து பேரை சென்னை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை விரிவடைந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல் மருத்துவர் ரமேஷ்குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழக்கில் எந்த அளவுக்கு தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி ஜாமினால் முதல்வர் விஜய்க்கு சிக்கல்! கரூர் பயணத்தில் காத்திருக்கும் செக்!
மேலும் தவெக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் சிங்கப்பூர் நபர் லட்சுமண பெருமாளுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து பேசி சதியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனாலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எம்எல்ஏ இளையராஜாவுக்கு லஞ்சம் பேரம் பேசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசுக்கு எதிராக சதி நடைபெற்றதாக முதல்வர் விஜய் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
போலீசார் தற்போது சிசிடிவி பதிவுகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பாக மேலும் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களத்தில் குதிரை பேர விவகாரம் இன்னும் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சபாநாயகரை சந்திக்கும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்!! தலைமை செயலகத்தில் பரபரப்பு!!