×
 

"118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்க முடியாது என்று ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்கள் ஆகியும், புதிய ஆட்சி அமைப்பதில் நீடித்து வந்த இழுபறிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் இன்றைய அறிவிப்பு ஒரு முக்கிய முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைச் சந்தித்த ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் அவரை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று நேரடி நிபந்தனை விதித்துள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று (மே 7) தவெக தலைவர் விஜயுடனான இரண்டாவது சந்திப்பிற்குப் பிறகு, ஆளுநர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, 

வெறுமனே வாய்மொழியாக ஆதரவு உள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது. 118 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பித்தால் மட்டுமே முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்க முடியும்" என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை அமைத்த பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என்ற விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர், "குதிரை பேரத்திற்கு (Horse Trading) ஒருபோதும் வழிவகை செய்ய முடியாது" என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

ஒரு சுவாரசியமான திருப்பமாக, "திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் வந்தால், அவர்களையும் ஆட்சி அமைக்க அழைக்கத் தயாராக இருப்பேன்" என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தவெக 108 இடங்களை வென்றுள்ள நிலையில், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களுடன் சேர்த்து தற்போது விஜய்க்கு 113 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது.

மெஜாரிட்டிக்குத் தேவையான இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட விஜய் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற அவர் கடிதம் எழுதியுள்ளார். நடப்புச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 9-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள் 118 பேரின் ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.

ஆளுநரின் இந்த "கையெழுத்து" நிபந்தனையால், நாளை (மே 8) ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறுமா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருபுறம் ஆளுநரின் முடிவிற்கு எதிராகக் காங்கிரஸ் நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது.

 

இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share