×
 

ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்? சுயசரிதையில் வெளியாகப்போகும் ‘ரகசியங்கள்’? பாஜகவுக்கு நெருக்கடி!

உச்ச நீதிமன்றத்தில் தனக்கு நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கும் பல வழக்கறிஞர்களை சந்தித்த தன்கர், அவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது

முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் மீண்டும் வழக்கறிஞர் பணியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உடல்நலக் காரணங்களால் பதவியை ராஜினாமா செய்ததாக தன்கர் அப்போது தெரிவித்திருந்தார். எனினும், அவரது ராஜினாமாவுக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம் என்ற ஊகங்கள் அப்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்தன. குறிப்பாக, மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் பல்வேறு கருத்துகள் பரவின. இதற்கு உறுதியான ஆதாரம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்கர் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்பதால், தற்போது மீண்டும் நீதிமன்றப் பணிக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றபோது, வாக்களிப்பதற்காக அவர் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு சென்றார்.

இதையும் படிங்க: ரூ.5 கோடி அபராதம் ரத்து! யமுனை விழா வழக்கில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு வெற்றி!

அப்போது, தனக்கு நெருக்கமான சில மூத்த வழக்கறிஞர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஒரு மூத்த வழக்கறிஞரும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், தன்கர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராக வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் தனக்கு நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கும் பல வழக்கறிஞர்களை சந்தித்த தன்கர், அவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான பின்னணி குறித்து தனக்கு நெருக்கமான வழக்கறிஞர்களிடம் அவர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் மேலும் பரபரப்பை ஏற்படுத்துவது, தனது பதவி விலகலுக்கான உண்மையான காரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை சுயசரிதை புத்தகத்தில் பதிவு செய்யப் போவதாக தன்கர் தெரிவித்ததாக கூறப்படுவதுதான்.

அந்த புத்தகம் எப்போது வெளியாகும், அதில் என்ன தகவல்கள் இடம்பெறும் என்பது தற்போது தெளிவாகவில்லை. இருப்பினும், தன்கரின் பதவி விலகல் குறித்து நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் விவாதங்களுக்கு அவரது சுயசரிதை புதிய பரிமாணத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: தயாநிதி மாறன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தொலைத்தொடர்பு செயலரை சாட்சியாக அழைக்க அனுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share