×
 

விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடு!! காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் காட்டம்!!

விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடு என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருப்பதை ஒழுக்கக்கேடான செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மணிசங்கர் அய்யர் இது குறித்து கூறியதாவது: “100 ஆண்டுகளுக்கு முன்பு, 1925 நவம்பரில் மகாத்மா காந்தி தனது ‘நவஜீவன்’ இதழில் சுயராஜ்யம் என்பது அறநெறி சார்ந்த அரசியலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸ் கட்சி தற்போது அந்தக் கட்டளையை மீறியுள்ளது. தி.மு.க. உடன் கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான த.வெ.க.வுடன் இணைந்திருப்பது மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரான செயல்” என்றார்.

மேலும், “இது சந்தர்ப்பவாத அரசியல். இதுபோன்ற முடிவுகள் கட்சியின் முன்னேற்றத்துக்கு உதவாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினால் பிற கட்சிகளும் விலகிவிடும் என நினைத்தோம். ஆனால் யாரும் விலகவில்லை. இப்போது காங்கிரஸ் தனித்து நிச்சயமற்ற சூழலில் தொங்கிக்கொண்டிருக்கிறது” என அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: தவெக விஜய்க்கு கூட்டணி கதவு திறந்தாச்சு! யூடர்ன் போட்டது காங்., விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

“விஜய் கட்சியுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு. இது அறிவான செயலா? நல்ல அரசியலா? அல்லது ஒழுக்கமான அரசியலா? இந்த சந்தர்ப்பவாத அரசியல் எந்த அளவுகோலைப் பூர்த்தி செய்கிறது?” என மணிசங்கர் அய்யர் கேள்வி எழுப்பினார். தற்போது தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளதாகவும், காங்கிரஸ் அந்தரத்தில் தொங்கும் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய அரசியல் காங்கிரஸ் கட்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தி.மு.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு த.வெ.க.வுடன் காங்கிரஸ் இணைந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர்களிடையேயே இந்த முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கட்சியின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவிக்கும் மணிசங்கர் அய்யரின் கருத்து காங்கிரஸ் உள்ளடி மோதலை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

தமிழக அரசியல் தற்போது மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு கட்சியின் நீண்டகால கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share