மேட்டூர் அணை தாமத திறப்பால் பல பிரச்சனைகள்..!! MRK பன்னீர் செல்வம் விளாசல்.!!
தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக எம் ஆர் கே பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியின் சாதனைகளுள் ஒன்றாக வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, தற்போதைய நிர்வாகத் திறனற்ற திமுக அல்லாத ஆட்சியில் பெரும் தாமதத்துடன் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை செய்யப்படும் குறுவைப் பருவ நெல் சாகுபடி முற்றிலுமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவிதத் திட்டமும் இன்றி தற்போது தாமதமாகத் திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணையினால் தங்களுக்கு என்ன பயன் என்று டெல்டா விவசாயிகள் விரக்தியோடு கேள்வி எழுப்புகின்றனர் என பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விவசாயிகளும் விவசாயச் சங்கங்களும் முன்வைக்கும் நியாயமான கருத்துகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது இப்போது அவசியமாகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கால்வாய்ப் பாசனத்திற்குத் தண்ணீர் வராததால் நிலத்தடி நீரை நம்பி ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் நீரின்றிப் பயிர்களைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக நேரிடுவதுடன், ஏற்கனவே கடன் தள்ளுபடியில் இந்த அரசின் குழப்பங்களால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பில் இருக்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது என அவர் எச்சரித்துள்ளார்.பருவகால மழை மற்றும் அணையின் நீர்வரத்தைப் பொறுத்தே அடுத்தடுத்த சாகுபடிப் பணிகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த விவசாயச் சுழற்சிக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டம் திடீர் நிறுத்தம்... தவெக அரசு தடாலடி உத்தரவு... என்ன காரணம்?
ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடிப் பயிர்கள் முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு வர 120 முதல் 140 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும். ஆனால் தற்போதைய அணை நீர் இருப்பைக் கொண்டு சுமார் 54 டிஎம்சி அளவில் அரசு முதற்கட்டமாக 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கத் திட்டமிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த சம்பா, தாளடி சாகுபடிக்கு சுமார் 205 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில் அணையில் தற்போது பாதி அளவு மட்டுமே நீர் இருப்பது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏன் பதறுர..? ஊழல்-னு சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!