ரூ.311 கோடி கொடுத்தோமே! ஏன் பயன்படுத்தல! கேரளம் மீது குற்றம் சாட்டும் நிர்மலா சீதாராமன்!
“தேசிய பேரிடர் தணிப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்ட 311 கோடி ரூபாயை பயன்படுத்தாமல், கேரள அரசு கிடப்பில் போட்டுள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்துவதில்லை என கடுமையாக குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, தேசிய பேரிடர் தணிப்பு நிதியாக (National Disaster Response Fund) கேரளாவுக்கு ஒதுக்கப்பட்ட 311.95 கோடி ரூபாயை அந்த மாநில அரசு இதுவரை பயன்படுத்தவே இல்லை என தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டி நிதியை தாமதப்படுத்துகிறது” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “மாநில அரசுகள் ஏற்கனவே பெற்ற நிதியை எப்படி செலவழித்தன என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழ் (Utilization Certificate) சமர்ப்பிக்காமல், அடுத்த கட்ட நிதியை மத்திய அரசால் விடுவிக்க முடியாது” என்றார்.
“கேரளாவுக்கு 311.95 கோடி ரூபாய் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அந்த தொகையை அவர்கள் பயன்படுத்தவில்லை. மாநில அரசு விண்ணப்பித்து, சரியான விவரங்களை சமர்ப்பித்தால்தான் நிதி விடுவிக்கப்படும். ஒப்புதல் கொடுப்பது ஒன்று, அதை உண்மையில் பெற்று செலவழிப்பது வேறு” என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: இந்தியாவின் செல்வாக்கு கூடிக்கிட்டே வருது! மோடியை வெல்கம் பண்ண தயாரா இருக்கோம்! ரஷ்ய அமைச்சர் பெருமிதம்!
விவசாய கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கும் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். “விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என அவர் கூறினார்.
இருப்பினும், விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கிசான் கிரெடிட் கார்டு மூலம் சரியான நேரத்தில் போதுமான கடன் வழங்குதல், 3 லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடனுக்கு வட்டி மானியம் உள்ளிட்டவை அடங்கும் என்றார்.
இந்த விவாதம் லோக்சபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நிதி அமைச்சரின் பதில், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அரசு தரப்பினர் வாதிட்டனர்.
கேரள அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. தேசிய பேரிடர் நிதியை பயன்படுத்தாமல் வைத்திருப்பது குறித்து விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. இந்த சர்ச்சை மத்திய-மாநில உறவுகளில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை..! திமுக நிர்வாகியின் குரூர புத்தி..!! தட்டி தூக்கிய போலீஸ்..!!