×
 

பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பணிகள் முறையாக முடிக்கப்பட்டு, தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பணம் விடுவிப்பதில் தாமதம் செய்வதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் முக்கிய சாலை மற்றும் பாலம் பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முந்தைய ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் பெற்ற பணிகளுக்கான தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சில ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தரமற்ற பணிகள், ஆவணக் குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் 68 கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு சாலை மற்றும் பாலம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அடுத்தகட்ட பணிகளை தொடங்குவதிலும், புதிய திட்டங்களை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

இதுகுறித்து சில ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் பணிகள் முடிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, பொதுவாக 15 முதல் 30 நாட்களுக்குள் தொகை விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தற்போது சாலை மற்றும் மேம்பால பணிகளை முடித்த பின்னரும், பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவதை வரவேற்பதாக தெரிவித்த ஒப்பந்ததாரர்கள், முந்தைய ஆட்சியில் டெண்டர் பெற்றவர்கள் என்பதற்காக பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பணிகள் முறையாக முடிக்கப்பட்டு, தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பணம் விடுவிப்பதில் தாமதம் செய்வதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலைப் பணிகளின் தரம் குறைவாக இருப்பது, ஒப்பந்த விதிகளுக்கு ஏற்ப பணிகள் நிறைவு செய்யப்படாதது அல்லது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதது போன்ற காரணங்களால் மட்டுமே பணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்ததாரர்களின் புகார் மற்றும் துறையின் விளக்கம் என இருதரப்பு கருத்துகளும் வெளியாகியுள்ள நிலையில், நிலுவையில் உள்ள பணிகளுக்கான தொகை விரைவாக விடுவிக்கப்படுமா என்பதே தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share