திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியல் அறை கெமிக்கல்?! சந்திரபாபு நாயுடு மீண்டும் பகீர்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!
கர்னுால் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய சந்திராபாபு நாயுடு, திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியலறை ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரபல லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார். முன்னதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தேவஸ்தானத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐ சிறப்பு விசாரணை குழு இதை ஆய்வு செய்தது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், தாவர எண்ணெய் கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. மொத்தம் 250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், 36 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை குழு தெரிவித்தது.
இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, “தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் நான் விலங்கு கொழுப்பு கலந்ததாக கூறினேன். கலப்படம் நடந்தது உறுதியாகியுள்ளது. கடவுளுக்கான கைங்கர்யத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள் பாவம் செய்துள்ளனர். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்! குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை! கமிஷன் அமைக்கிறது ஆந்திரா!
இந்நிலையில், கர்னூல் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு மேலும் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். “ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி வெங்கடேஸ்வரரின் புகழை கெடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், லட்டு தயாரிப்புக்கு குளியலறை சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனங்களைக்கூட பயன்படுத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “இரண்டு வகை ரசாயனங்கள் உள்ளன. ஒன்று தாவர அடிப்படையில் தயாரிக்கப்படுவது. விலங்கு கொழுப்பு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட கலப்பட நெய்யை ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தி பிரசாத லட்டு தயாரித்து வழங்கியுள்ளனர்” என்று பேசினார்.
சிபிஐ அறிக்கையில் விலங்கு கொழுப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இப்போது குளியலறை ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு அடுத்த குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார். இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தின் தூய்மை குறித்து ஏற்கனவே எழுந்த சர்ச்சை இப்போது மீண்டும் எழுந்துள்ளது. ஆந்திர அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டின் நெய்யில் பாமாயில்! கடவுளுக்கு எதிரான பாவம்! ஆந்திர முதல்வர் கொதிப்பு!