நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை! 'படிவம் 17C' கொண்டு வர கட்சித் தலைமை உத்தரவு!
தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பனையூர் அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 'Form 17C' ஆவணங்களுடன் ஆஜராகத் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் நாளை மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப்ரல் 30) பிற்பகல் 1:20 மணி அளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் வேட்பாளர்கள் அனைவரும், தங்கள் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் பெறப்பட்ட ‘Form 17C’ படிவங்களை (வாக்குச்சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளின் கணக்கு விவரம்) நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கழகத் தலைமை நிலையச் செயலகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இறுதித் தரவுகள் இன்னும் வராத நிலையில், கட்சி வாரியாகப் பெறப்பட்ட இந்தப் படிவங்களைக் கொண்டு தவெக-வின் வெற்றி வாய்ப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட விஜய் திட்டமிட்டுள்ளார்.
நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வேட்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுடன் உதவியாளர்களோ அல்லது கட்சி நிர்வாகிகளோ என வேறு யாரையும் அழைத்து வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் தவெக-விற்குச் சாதகமாக வந்து கொண்டிருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து வேட்பாளர்களுக்கு விஜய் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!
இதையும் படிங்க: சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!