குஜராத் மாநிலத்தின் பெருமைமிகு சோமநாதர் கோயில், இந்தியாவின் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த புனிதத் தலம், வரலாறு முழுவதும் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டுள்ளது. பொன், மணி, நவரத்தினங்கள் நிறைந்த பொக்கிஷமாகத் திகழ்ந்த இந்தக் கோயிலை, கஜினி முகமது 17 முறை கொள்ளையடித்துச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
பின்னர் முகலாய ஆட்சியாளர்களின் தாக்குதல்களால் பலமுறை சிதைக்கப்பட்ட இந்தக் கோயில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நெருங்கிய சகாவான சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் 75 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் புனரமைக்கப்பட்டது. இந்த மகத்தான புனரமைப்பின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சோமநாத் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கடந்த 8ம் தேதி தொடங்கிய விழாக்கள் இன்று (திங்கட்கிழமை) உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் பிரதான அமுதப் பெருவிழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சோமநாதர் கோயிலுக்கு வருகை தந்தார். நேற்றிரவே குஜராத்துக்கு வந்த பிரதமர், இன்று காலையில் சோமநாதர் கோயிலைச் சென்றடைந்து, ஸ்ரீ சோமநாதரை தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: 98 வயது.. பாஜக மூத்த தொண்டர் காலில் விழுந்தார் பிரதமர் மோடி..!! பதவியேற்பு விழாவில் சுவாரசியம்..!!
விழாவில் பக்தி பரவசத்துடன் பங்கேற்ற அவர், கோயிலின் வரலாற்றுப் பெருமையையும், தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார். சோமநாதர் கோயில் புனரமைப்பு என்பது வெறும் கட்டிட மீட்டெடுப்பு மட்டுமல்ல, இந்திய பண்பாட்டு மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் சின்னம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
https://x.com/i/status/2053714813323538637
விழாவை ஒட்டி சோமநாத் நகரம் முழுவதும் பக்தர் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்துள்ளனர். கோயில் வளாகம் முழுவதும் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, பக்திப் பாடல்களும், வேத மந்திரங்களும் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

முன்னதாக, நேற்று குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் சோமநாதர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். மாநில அரசு சார்பில் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த 75ஆவது ஆண்டு விழா, சோமநாதரின் புனிதப் பெருமையை நாடு முழுவதும் மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த விழா இந்தியாவின் ஆன்மீக எழுச்சிக்கு அடையாளமாகத் திகழ்வதோடு, பழங்காலப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கும் மகத்தான பரிசாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பாக்.-க்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை..!! நிறைவடைந்தது ஒரு வருடம்..!! பிரதமர் மோடி செய்த செயல்..!!