தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது மாநிலத்தின் இரு மொழி கொள்கைக்கு முரணானது என்று வலியுறுத்தியுள்ளது.
நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த நிலைப்பாடு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜவஹர் நவோதயா பள்ளிகள் மும்மொழி கொள்கையை (ஹிந்தி, ஆங்கிலம், மாநில மொழி) அடிப்படையாகக் கொண்டவை.
இது தமிழகத்தில் சட்டபூர்வமாக கடைபிடிக்கப்படும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழி கொள்கைக்கு (Tamil Nadu Tamil Learning Act, 2006) முரணானது. இதனால், மாநில சட்டத்தை மீறி இந்த பள்ளிகளை அனுமதிக்க முடியாது என்று அரசு வாதிட்டுள்ளது.
இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!
தமிழகத்தில் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மாதிரி பள்ளிகள் (Model Residential Schools) சிறப்பாக இயங்கி வருகின்றன. 38 உறைவிட வசதியுடன் கூடிய இந்த பள்ளிகள் அதிநவீன வசதிகளுடன் தரமான கல்வியை வழங்குகின்றன. கிராமப்புற மாணவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் இவை செயல்படுகின்றன.

2024-25 கல்வியாண்டில் மட்டும் 1,340 மாணவர்கள் அகில இந்திய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பலர் முழு உதவித்தொகை பெற்று சர்வதேச பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர். இது தமிழக கல்வி முறையின் வெற்றியை நிரூபிக்கிறது என்று பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிய மத்திய பள்ளிகளை திறப்பதற்கு பதிலாக, மத்திய அரசு தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும், கூடுதல் நிறுவனங்கள் திறப்பது நிதி சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு வாதிட்டுள்ளது. மாறாக, ஏற்கனவே உள்ள மாதிரி பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தமிழகம் இந்தியாவில் ஜவஹர் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலமாக உள்ளது. இந்த வழக்கு மொழி கொள்கை, மாநில உரிமை, கல்வி சமத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நீண்டகாலமாக நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் முன்பு இரு தரப்பும் விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், தமிழக அரசின் இந்த உறுதியான நிலைப்பாடு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: போதை மிருகங்களால் துரத்தி துரத்திப் பாலியல் கொடுமை.. 14 வயது சிறுமி நேர்ந்த துயரம்... அதிமுக கொந்தளிப்பு..!!