தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் (History Sheeters), சமூக விரோதிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை மாநிலம் முழுவதும் அதிரடி சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் அதிரடி உத்தரவின்படி, கடந்த ஜூலை 8 முதல் ஜூலை 14, 2026 வரை இந்த தீவிர சிறப்பு நடவடிக்கை மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது. இந்த ஒரு வார காலத்தில், சரித்திரப்பதிவேடு ரவுடிகள், தொடர் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது தீவிர கண்காணிப்பும், திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டன.
இந்த மெகா ஆபரேஷனின் போது, மாநிலம் முழுவதும் மொத்தம் 22,519 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களிடம் காவல்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையின் அடிப்படையில், பல்வேறு சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 822 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் அதிரடி கைது..! 20 நாட்களாக போலீஸ்க்கு தண்ணி காட்டிய சம்பவம்..!!

நீண்ட நாட்களாகக் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக, பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (Non-Bailable Warrants - NBW) நிறைவேற்றும் சிறப்புப் பணியும் இந்த வாரத்தில் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம், ஒரே வாரத்தில் 2,648 பிடியாணைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள மற்ற பிடியாணைகளையும் விரைந்து முடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (SPs) மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் காவல்துறை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், வழக்கமான திடீர் சோதனைகள் மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் மூலம் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!