சென்னை: தமிழக மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தணிக்கை விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், முறைகேட்டின் மொத்த மதிப்பு ரூ.600 கோடி வரை இருக்கலாம் என தணிக்கை அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், முழுமையான தணிக்கை நிறைவடையாத நிலையில் இந்த தொகை இறுதி செய்யப்பட்டதாக கருத முடியாது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊரக புத்தாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை அரசு நிதி வழங்குவதாக கூறப்படுகிறது. இதுதவிர வங்கிக் கடன்களும் பெறப்படுகின்றன.
இந்த நிதி செலவினங்களை ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கடேசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை குழு அமைக்கப்பட்டது. 388 வட்டாரங்கள் மற்றும் 12,560 ஊராட்சிகளில் திட்ட நிதி மற்றும் செலவு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 200 வட்டாரங்களில் ஆய்வு முடிந்துள்ளதாகவும், மேலும் 180 வட்டாரங்களில் தணிக்கை நடைபெற வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே IP முகவரியில் பல நிறுவனங்கள் டெண்டர்! ரூ.1,028 கோடி முறைகேடு! மின்வாரிய வழக்கில் அதிரடி திருப்பம்!

இந்த ஆய்வில், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய கடன்கள் உறவினர்கள் பெயரில் வழங்கப்பட்டதாகவும், பயிற்சிகள் நடத்தாமலேயே நடத்தப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாகவும் புகார்கள் கண்டறியப்பட்டுள்ளன. விவசாய இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் வாங்கியதாக போலி பில்கள் தயாரித்தது, பயிற்சி நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை முறைகேடாக காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.10.5 கோடி கையாடல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.73 கோடி முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை விவகாரத்தில் சில அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஏற்கனவே நடைபெற்று வரும் தணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில், கடந்த காலங்களுக்கான கணக்குகளை ஆய்வு செய்ய வேறு நிறுவனத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் மூடி மறைக்கப்படலாம் என சில தணிக்கை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாக வேண்டியுள்ளது.
முழுமையான தணிக்கை முடிந்த பின்னரே முறைகேட்டின் உண்மையான அளவு தெரியவரும் நிலையில், மகளிர் திட்ட நிதி தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உங்கள் ரேஷன் கார்டு தகவல்கள் திருடப்படலாம்? தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்த வார்னிங்!