ஆவின் பால்களில் ரசாயன நெடி..! பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை மண்டலம்..!
ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயன நெடி வீசியதாக புகார் எழுந்த நிலையில் பாலித்தீன் பிலிம் ரோல்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசுவதாக நுகர்வோர்கள் புகார் அளித்தனர். குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினசரி அருந்தும் பாலில் இத்தகைய வாசனை ஏற்பட்டதால் பெற்றோர்களும் பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். சமீபத்திய மூன்று நாட்களில் விநியோகிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் இந்தப் பிரச்சினை தெளிவாகத் தெரிந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநியோக டெப்போக்களிலும், சத்தமங்கலம் ஆவின் பால் பண்ணையிலும் மாதிரிகளைச் சேகரித்தனர். இந்தப் பண்ணை நாளொன்றுக்கு சுமார் 1.9 லட்சம் லிட்டர் பாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுக்கு வழங்குகிறது. சேகரிக்கப்பட்ட பால் மற்றும் பாக்கெட் மாதிரிகள் ஆய்வுக்காக சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வரும் வாரத்தில் கிடைக்கும் என்றும், அதன்பிறகுதான் ஒழுங்கு நடவடிக்கை அல்லது அபராதம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவின் மதுரை மண்டல நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தியபோது, பால் பாக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் ஃபிலிம்களில் ரசாயன நெடி இருப்பது உறுதியானது. பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் வழங்கிய இந்த ஃபிலிம் ரோல்கள் தரக்குறைவாக இருந்தன. அதனால் மதுரை ஆவின் மண்டலம் 160 ரோல்களைத் திருப்பி அனுப்பியது. அந்த நிறுவனத்தை பிளாக்லிஸ்ட் செய்யவும் பரிந்துரை செய்தது. இந்த ஃபிலிம்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. தனியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பால் விநியோகம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆவின் பால் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? சாட்டையை சுழற்றும் முதல்வர் விஜய்! புதிய திட்டம் தொடக்கம்!
இதேபோன்ற தரக்குறைவான ஃபிலிம் நாமக்கல் மாவட்டத்திலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டார். ஒப்பந்த அடிப்படையில் ஃபிலிம் வழங்கிய நிறுவனத்திற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் மையத்தைப் பார்வையிட்ட அவர், தரமான ஃபிலிம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், நுகர்வோருக்கு தரமான பால் கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?